ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி பொதுமக்களால் கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நாட்டில் மழையுடனான காலநிலை நிலவிய போதிலும், கைவிடப்படாமல் தொடர்ச்சியாக 12 ஆவது நாளான இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, நேற்று ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவருக்கு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் தமது கையடக்கத் தொலைபேசிகள் மூலம் ஒளி வீசி அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் அங்கு மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரசு தொடர்ந்தும் போராட்டகாரர்களை கலைக்கும் நோக்கில் செயற்பட்டுவருகின்றது. ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் சில பகுதிகளில் தடைகள் போடப்பட்டிருந்ததுடன் காலிமுகத்திடலை அண்டிய பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஊடக மையத்தில் சட்டத்தரணி நுவான் போப்பகே உட்பட போராட்டத்தில் பங்காற்றும் தரப்பினர் சிலர் தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதன்போது அவர்கள் பிரதானமாக சமீபத்திய போராட்டங்களில் பொலிஸாரின் தலையீடு அதனால் ஏற்படும் அமைதியற்ற நிலை மற்றும் ஆர்ப்பாட்டக் களத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்கள் அகற்றப்படுகின்றமை என்பவற்றை கண்டித்து கருத்துக்களை வெளியிட்டனர்.
இதேவேளை, இன்று முதல் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் ஒரு வார ஹர்த்தால் அனிஷ்டிப்புக்கு 300 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
எனினும் இதற்கு, முல்லைத்தீவைத் தவிர வடக்கு, கிழக்கில் ஆதரவு தெரிவிக்கப்படவில்லை.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.