ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் கடந்த 12 தினங்களாக தொடர் போராட்ட இடம்பெற்று வரும் நிலையில், குறித்த போராட்டத்தில் ஆதரவு தெரிவித்த பொலிஸ் சார்ஜன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் அமுலாகும் வண்ணம் அவர் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த பொலிஸ் சார்ஜன், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடல் ' கோட்டா கோ கம ' என பெயரிடப்பட்டுள்ள போராட்ட களத்துக்கு கடந்த 14 ஆம் திகதி பொலிஸ் சீருடையில் சென்றதோடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதன் போது நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலைமையால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை சகிக்க முடியாது எனவும், நாளை இதனால் தனது தொழில் இல்லாமல் போனாலும் தான் மாணிக்கக்கல் சுரங்கங்களில் பணியாற்றியேனும் பிழைப்பை நடத்த எண்ணியுள்ளதாக பொலிஸ் உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மத்தியில் தெரிவித்தார்.
இது தொடர்பான காணொளிகள் சமூக பரவியதோடு குட்டிகல பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையாற்றும் பொலிஸ் சார்ஜன் டப்ளியூ.எம். அமரதாச (30158) கைது செய்யப்பட்டார்.
தண்டனை சட்டக் கோவையின் 162 ஆம் அத்தியாயத்தின் கீழும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 82 ஆவது அத்தியாயத்தின் கீழும் குறித்த சார்ஜன் குற்றங்களை புரிந்துள்ளதாக கூறியே அவரை பொலிஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர், சார்ஜனுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அத்தோடு அவரை மன்றில் ஆஜர் செய்ய பொலிஸாரை் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எனினும் தற்போது பொலிஸ் சார்ஜன் டப்ளியூ.எம். அமரதாச பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.