உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை நினைவுகூர்ந்தும், உயிரிழந்தவர்களுக்கு நீதிவேண்டியும் இன்று நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி, குறித்த தாக்குதல் தினத்தில் முதலாவது குண்டு வெடிப்பு இடம்பெற்ற நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் மாலை 3.30 முதல் 4 மணி வரை பிரார்த்தனைகளும், மாலை 4 மணிக்கு கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலிருந்து அமைதிப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணியானது 5 மணியளவில் நீர்கொழும்பு பஸ்தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள புனித ஜோசப்பாஸ் திருச்சொரூபத்தை வந்தடைந்த நிலையில் அங்கு சிறப்பு ஆராதனைகளும் மதத்தலைவர்களின் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
இதன் போத உரையாற்றிய பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதல் ஆட்சியாளர்களின் திட்டமிட்ட சதி என தெரிவித்தார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் நீதி கிடைக்காததன் காரணமாக பாப்பரசர் அறிவுறுத்தலுக்கு அமைய, தாக்குதலில் பாதிக்கப்பட்ட 35 பேருடன் சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ளம் நோக்கில் தாம் இன்று இரவு ரோம் நகருக்கு பயணிக்க உள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் இளைஞர்களின் போராட்டத்திற்கு இந்த போராட்டத்தின் ஊடாக ஆதரவு வழங்குவதாகவும் பேராயர் போது மேலும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எதிரான பேரணியில் பெரும் திரளான மக்கள் பங்குபற்றினர், நாட்டின் தற்போதைய நிலைக்கு அரசாங்கமே காரணம் என கூறியதோடு அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரினர்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.