இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் எனவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலம் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி தொடர்பாக மகாநாயக்கர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் யோசனைகள் குறித்த விளக்கமளித்து எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாகவும் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க சர்வகட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த போதும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசு பதவி விலக வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அதற்கு கட்சிகள் மறுப்பு வெளியிட்டன.
எனினும் பதவி விலக போவதில்லை என்ற பகிரங்க அறிவிப்பை ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளியிட்டிருந்தனர்.
நாட்டின் பொருளாதநிலைமையை சரிசெய்ய நாட்டின் அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவது இன்றியமையாதது அந்த வகையில் தற்போதைய அரசை பதவி விலககோரி பல்வேறுதரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், தற்போதைய அரசின் கீழ் நாட்டிற்கு உதவிகளை வழங்குவதையும் சர்வதேசங்கள் தாமதப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் மக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இதேவேளை சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு தாம் அங்கீகாரம் அளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு தாம் அங்கீகாரம் அளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் தற்போதைய தலைவரான பேராசிரியர் சரித ஹேரத், பிரதமரும் அவரது அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டும் என தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட ஆறு யோசனைகளை சரித ஹேரத் முன்வைத்துள்ளதுடன், ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் சிறிய, காபந்து அரசாங்கத்தை அமைத்து எட்டு மாதங்களுக்குப் பின்னர் தேர்தலை நடத்துமாறும் பரிந்துரைத்துள்ளார்.