19வது மற்றும் 20வது திருத்தங்களில் இருந்து சாதகமான அம்சங்களின் அடிப்படையில் 21வது அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதல் தடவையாக இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தீர்மானத்தை பிரதமர் சமர்ப்பித்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை இந்த யோசனைக்கு உடன்படவில்லை.19வது திருத்தச் சட்டம் மற்றும் 20வது திருத்தச் சட்டங்களில் உள்ள சாதகமான விடயங்களைக் கொண்டிருப்பதால், 21வது திருத்தச் சட்டத்தை அனைத்து சாதகமான விடயங்களையும் சேர்த்து முன்வைக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கமைய அமைச்சர்களான அலி சப்ரி, ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் அடங்கிய உபகுழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இந்த உபகுழுவினால் தயாரிக்கப்படும் சட்டவரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் தெரிவுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதன்படி, புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு பல மாதங்கள் பிடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.