நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாயின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சிங்கள, முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ளவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று (27) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு கடுமையான எதிர்கொண்டுள்ளமைக்கு காரணமான ஆட்சியாளர்களை வீட்டுக்கு செல்லுமாறு கோரி காலிமுகத்திடலில் தொடக்கம் நாடு பூராகவும் ஜனநாயகரீதியான போராட்டம் இடம்பெறுகின்றது.
இது ஜனநாயகரீதியான போராட்டம் என்பதால் எவரையும் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததை நாம் வரவைற்பதோடு போராட்டத்திற்கான ஆதரவை தெரிவிக்கின்றோம்.
அத்தோடு தமிழ் மக்களுக்கு யுத்தகாலத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமையும் ஜனநாயக ரீதியான இப் போராட்டத்தில் சகோதர சிங்கள மக்களும் வலியுறுத்தி வருகின்றமை இந்த நாட்டில் ஏற்பட்ட பாரிய மாற்றமாகும்.
இந்நிலையில் தமிழ் மக்களின் மனங்களில் புரையோடிப்போயுள்ள யுத்த வலிகளை நினைவுகூர்ந்து யுத்தத்தால் மரணித்த தமிழர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் கலந்துகொண்டு அம் மக்களுக்காக அஞ்சலி செலுத்த அழைத்து நிற்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.