ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்த சம்பவத்தில், தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் திடீர் சுகயீனமுற்றுள்ளதாக நாடகம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள தாம் உத்தரவிட்டதாக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்திரத்ன கடந்த 22 ஆம் திகதி நான்காவது தடவையாக வழக்கு விசாரணை இடம்பெற்ற போது கேகாலை நீதிவான் வாசனா நவரட்ன முன்னிலையில், சாட்சியம் அளித்தார்.
மேலும், நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை கலகத் தடுப்புப் பிரிவினர் நான்கு T-56 துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்களைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியையும், அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கேகாலை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையிலேயே கைதாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் திடீர் சுகயீனமுற்றுள்ளதாக தெரிவித்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.
தொடர்ச்சியாக தனக்கு வாந்தி வருவதாக தெரிவித்து அவர் இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதியாகியுள்ளதாக தெரியவருகின்றது.
இதனைவிட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் உத்தரவை நடைமுறைப்படுத்திய, துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய உதவி பொலிஸ் அத்தியட்சர் தர்மரத்ன உள்ளிட்ட 6 பொலிஸார் குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையில் பல்வேறு சுகயீன நிலைமைகலைக் கூறி சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு எதிர்வரும் மே 2 ஆம் திகதி நீதிவான் வாசனா நவரட்ன முன்னிலையில் விசாரணைக்கு வரும் நிலையில், அப்போது இந்த 7 பேரையும் கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகரவின் மேற்பார்வையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.