19வது திருத்தத்தை நீக்கி புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதில் பிரதமருக்கு விருப்பமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மனோ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நேற்றிரவு (28) சபாநாயகரை தொடர்பு கொண்டு வினவியபோது அவ்வாறான சட்டமூலம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என அவர் பதிலளித்துள்ளார்.
இதையடுத்து எம்.பி மனோ கணேசன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பில் கேட்டறிந்தார். ''அந்த அரசியல் சாசனக் கதைகளை விட பொருளாதாரம்தான் முக்கியம் தம்பி. மக்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வுகளை வழங்குகிறோம்.
நாளை, நாளை மறுநாள் வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கும். அப்போது அந்த கிளர்ச்சிகள் அனைத்தும் மறைந்துவிடும். பயப்படாதீங்க தம்பி..'' என்று கூறி தொலைபேசி உரையாடலை பிரமர் முடித்ததாக மனோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
2/2: நேற்றிரவு, சபாநாயகர் மகிந்தயாபாவிடம் @ParliamentLK, இதுபற்றி கேட்ட போது, தனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது என்றார். இதன்பின் பிரதமரை @PresRajapaksa அழைத்து கேட்ட போதே அவர் இதை கூறினார். 21ம் திருத்தத்தில் அரசுக்கு அக்கறையில்லையென தெரிகிறது.
— Mano Ganesan (@ManoGanesan) April 29, 2022
எவ்வாறாயினும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தேவையான மற்றும் உரிய காலத் திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்கான பிரேரணையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏப்ரல் 25ஆம் திகதி மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளதையடுத்து அதற்கு ஒப்புதல் பெறப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
அத்தோடு, நாடு எதிர்நோக்கும் சவாலை முறியடிக்க எடுக்க வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் குறித்து கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதமர், புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்தும் உரையாற்றினார்.
நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கு விரைவான மற்றும் நடைமுறைத் தீர்வாக அரசியலமைப்புத் திருத்தம் தேவை என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை தேவையான மற்றும் சரியான நேரத்தில் திருத்தங்களுடன் ஜனநாயக ரீதியாக அமுல்படுத்துவதே மிக உடனடி மற்றும் குறுகிய கால தீர்வாகும் என்று பிரதமர் வலியுறுத்தியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.