புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்ட ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (29) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக தேசிய சபையொன்றை நியமிக்க குறித்த சந்திப்பின் போது ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் உட்பட 15 தொடக்கம் 20 வரையிலான அமைச்சர்களை உள்ளடக்கிய வகையில் அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி எதிர்வரும் நாட்களில் ஐக்கிய மக்கள் சக்தியினருடனும்,மக்கள் விடுதலை முன்னணியினருடனும் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளார்.
அதேபோல் சுதந்திர கட்சியும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும். அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கம் எமக்கு கிடையாது.
தற்போதைய நிலையில் ஜனாதிபதியை பதவி நீக்கவும் முடியாது. பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தும் சாதகமான சூழல் நாட்டில் கிடையாது.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து அதனூடாக குறுகிய காலதீர்வை கண்டு பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும் என்றார்.