ஜனாதிபதி அமைக்க தீர்மானித்துள்ள இடைக்கால அரசாங்கம் எப்படியானது என்பதை முதலில் அறிந்த பின்னரே அதில் ஒரு கட்சியாக இணைவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ‘லங்காதீப’விடம் தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கம் என்பது அரசியலமைப்பில் காணப்படாத புதிய கருத்தாகும் எனவும் கட்சி என்ற வகையில் அது எவ்வாறு செயற்படுகின்றது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஜனாதிபதி இதுவரையில் அறிவிக்கவில்லை எனவும், எதிர்காலத்தில் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் கருத்துகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் இந்த நிலைப்பாடு ஜனாதிபதியின் யோசனைக்கு எதிரானது அல்ல எனவும், நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட பொறிமுறையொன்றை அமுல்படுத்த ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பது சாதகமான நிலை எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைத்து அரசியல் குழுக்களுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 10 எம்பிக்களின் குழு திரிபீடத்தின் மாநாயக்க தேரர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.