இலங்கை மத்திய வங்கியினால் கட்டணம் செலுத்தப்பட்ட இரண்டு எரிபொருள் கப்பல்கள் எதிர்வரும் 23 அல்லது 24 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.
டீசல், பெட்ரோலுடனான இரண்டு கப்பல்களே நாட்டை வந்தடையவுள்ளன.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கணக்காய்வொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் நியாயமாகவும் முறையாகவும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை என பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்று வருவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோகம் மாத்திரம் குறித்த ஆய்விற்கு உட்படுத்தப்படும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் IOC நிறுவனத்தின் எரிபொருள் விநியோகமானது தேசிய கணக்காய்விற்கு உட்படுத்தப்பட மாட்டாதெனவும் அலுவலகம் கூறியுள்ளது.