பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தில் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாகானந்த கொடித்துவக்கு, டொக்டர் குணதாச அமரசேகர உள்ளிட்ட 9 பேரினால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22 ஆவது திருத்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனூடாக அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அவை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற வேண்டும் எனவும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிடுமாறு கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.