கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்து நோயாளர்களுக்கான மருந்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
அனுராதபுரத்தில் அண்மையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த சிங்கள நடிகரும். ஒளிப்பதிவாளருமான ஜாக்சன் அன்டனியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார்.
ஜக்சன் அன்டனியின் நலன் விசாரித்த பின்னர், வைத்தியசாலை பணிப்பாளரைச் சந்தித்து ஏனைய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் தற்போது பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
மருந்துப் பற்றாக்குறையை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாடு பூராகவும் உள்ள மருந்துப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் வாழ்வில் தமக்கு பெரும் பொறுப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அதனையடுத்து ஜக்சன் அன்டனியின் மனைவியைச் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அன்டனியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். எதிர்கால சிகிச்சை தொடர்பாக ஏதேனும் உதவிகள் இருப்பின் உடனடியாகத் தமக்குத் தெரிவிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்த ஜனாதிபதி, சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளர்களிடம் நலன் விசாரித்தார்.