சர்வதேச காணாமற்போனோர் தினம் இன்றாகும். உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
கொஸ்டரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட 'கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு' என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் சட்டமுறையற்ற கைதுகளை எதிர்த்து இந்த கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இன்றைய நாள் சர்வதேச அளவில் காணாமல் போனோருக்கான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இலங்கையில் வவுனியாவில் 2014 ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பன்னாட்டு காணாமற்போனோர் நாள் நிகழ்வும், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றிருந்தது.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை சார்ந்த அமைப்புகள் இந்த தினத்தை முன்கொண்டு செல்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்தகாலத்திலும், யுத்தத்துக்குப் பின்னரும் ஆயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற வௌ;வேறு கலவரங்களின் போதும் அதிக எண்ணிக்கையானவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்றைய தினம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாயிரம் நாட்களை கடந்துள்ளது.
இந்தநிலையில் இன்று வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.