இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு (IMF) இடையில், அவசரகால கடன் வழங்குவதற்கான ஆரம்ப உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
விடயம் தொடர்பான நேரடியாக தொடர்புடைய நான்கு வட்டாரங்கள் இதனை தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை (1) வியாழக்கிழமை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடும் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டொலர்களை வரை கோரியுள்ளது.
இந்த நிலையில் கடன் இணக்கம் தொடர்பிலான கருத்துக்கான கோரிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை என்று ரோய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், திறைசேரியின் செயலாளர் உட்பட இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, அடுத்த 12 மணிநேரத்துக்குள், அரசாங்கத்துக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.