“கோட்டகோகம” போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற நடிகை தமிதா அபேரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தமிதா அபேரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் திலின கமகே, தலா 500,000 ரூபா அடங்கலான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு வலுக்கட்டாயமாக நுழைந்து ஆர்ப்பாட்டத்தின்போது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடந்த 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேபோன்ற மற்றொரு சம்பவம் தொடர்பாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் குற்றங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என நீதிமன்றில் பிரதிவாதியின் சட்டத்தரணியினால் நகர்த்தல் பத்திரமொன்று முன்வைக்கப்பட்டது.
காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு வலுக்கட்டாயமாக நுழைந்து ஆர்ப்பாட்டத்தின் போது அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டார்.