2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நடைபெறவிருந்த இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தேர்தல் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தேர்தலை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு இலங்கை கால்பந்து சம்மேளனம் விளையாட்டு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புதிய யாப்பின் பிரகாரம் அந்தந்த கால அவகாசம் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
விளையாட்டு விதிமுறைகளின்படி, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தலை மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சு இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனம் உள்ளிட்ட 26 விளையாட்டு சங்கங்களுக்கு அறிவித்திருந்தது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் கடந்த வருடம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றது. அங்கு புதிய கால்பந்து சம்மேளனத்தின் யாப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் அடுத்த உத்தியோகபூர்வ தேர்தலை நடத்த வேண்டும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆலோசனை வழங்கப்பட்டது.
எனவே, இந்த ஆண்டுக்கான உத்தியோகபூர்வ தேர்தலை புதிய கால்பந்து சம்மேளத்தின் யாப்பின் பிரகாரம் நடாத்துவது கட்டாயமாகும் எனவும், அவ்வாறு செய்யாவிட்டால் சர்வதேச தடையை தவிர்க்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு முதல் இலங்கை கால்பந்தாட்டச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என உலகக் கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கைக்கு அறிவித்துள்ள நிலையில், இதுவே இறுதி வாய்ப்பாக கருதப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியன இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளன.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் எதிர்வரும் தேர்தலை புதிய கால்பந்து சம்மேளனத்தின் யாப்பு வரைபு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் நடத்த முடியுமானால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக்காலம் 4 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA) மற்றும் ஆசிய கால்பந்தாட்ட மாநாட்டின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வந்து கடந்த 6ஆம் திகதி விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க, அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் சந்திப்பொன்றை நடத்தியது.
இலங்கையில் கால்பந்தாட்டத்தை ஊக்குவித்தல் தொடர்பாக இலங்கையின் விளையாட்டு மற்றும் கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகத்தின் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் யாப்புத் திருத்தம் மற்றும் அதிகாரிகள் தெரிவு தொடர்பிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி இன்னும் 2 மாதங்களுக்குள் புதிய ஆட்சிமன்றக் குழுவை நியமிக்க தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.