கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் ஒரு வார காலமாக உண்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகள் பதின்மூன்று பேரை உடனடியாக விடுவிக்கக் கோரி அவர்களது உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுத்த கைதிகளின் உறவினர்கள் குழு ஒருநாள் உண்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக யாழில் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது அன்புக்குரியவர்களை உடனடியாக விடுவிக்க தலையிடுமாறு வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் பிரதிநிதிகள் ஆளுநர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால், ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய வாசகத்தை ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரிடம் கையளித்ததாக வடக்கிலுள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எஸ். உதயசிவம், யு. உமாசுதன், எம். பார்த்திபன், எல். இம்பராஜ், ஒய். ராபின்சன், ஆர். சயந்தன், பி. நகுலேஸ்வரன், எஸ். சுதாஹரன், யு. சதீஷ்குமார், எஸ். சசீதன், ஆர். விவேகானந்தன், ஒய். டட்லி மற்றும் எல்.அஜந்தன் ஆகிய 13 அரசியல் கைதிகள் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் ஏழாவது நாளாகவும் உண்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உண்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள், 'கைதிகளுக்கான நீதிக்கான சர்வதேச தினத்தில்' அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர், அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகக் கூறினர்.
எனது சகோதரன் 27 வருடங்களாக அரசியல் கைதியாக இருக்கின்றார். தனது சகோதரனைச் சந்தித்துவிட்டு வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வந்த பெண் ஒருவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
உண்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், 2019-2020 காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட இருவர், யுத்தத்தின் போது எட்டு வயதுடையவர்கள் எனவும், அவர்களுக்கு யுத்தம் தொடர்பில் சரியான புரிதல் இல்லை எனவும் தமிழ் தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.