ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தாம் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் கடந்த 12ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமானதுடன், அடுத்த மாதம் 7ஆம் திகதி கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த அறிக்கைக்குப் பதிலாக, இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கை சார்பான நிலைப்பாட்டை முன்வைத்தார்.
இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உள்ளக பொறிமுறை மூலம் தீர்வு எட்டப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் கூறியிருப்பதாகவும், இதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் ஊழல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முல்லைத்தீவில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்த தவறியமைக்கு தமது கண்டனத்தையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் தலைவர் மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
“நாங்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து நீதிக்காக செயற்படுகிறோம் என்பதை அவர்கள் அறிவார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் இவர்கள் முக்கியமற்ற விடயங்களை பேசுவதும், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பதும் எமக்கு வேதனையளிக்கின்றது. மனிதநேயம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது." மரியசுரேஷ் ஈஸ்வரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.