இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நிலக்கரி இறக்குமதிக்கான கேள்விப்பத்திரம் சட்டரீதியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் வெளி தரப்பினரிடமிருந்து தொடர்ந்து விமர்சனங்களும் அழுத்தங்களும் முன்வைக்கப்படுவதாகவும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தலைவர் பதவியில் இனி பணியாற்ற முடியாது என்பதால் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி கொள்வனவை சீர்குலைக்க சில தரப்பினர் முயற்சித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தலைவரின் ராஜினாமாவை அமைச்சர் ஏற்றுள்ள போதிலும் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.
மகிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த போது ஜகத் பெரேரா இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.