நீதிமன்றத்தில் இன்று(13) ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, நீதிமன்றம் மற்றும் நீதவானுக்கு அவதூறு ஏற்படும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சனத் நிஷாந்த வௌியிட்டதாகக் குற்றஞ்சாட்டி, நீதிச்சேவை சங்கம் மற்றும் சட்டத்தரணிகள் சிலரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுவில் குறிப்பிட்டுள்ளவாறு நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு தண்டனை வழங்காதிருப்பதற்கான நியாயப்படுத்தலை இன்று(13) நீதிமன்றத்தில் ஆஜராகி தௌிவுபடுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று(13) மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சனத் நிஷாந்த மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.
அதன் காரணமாக சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.