பிரித்தானிய காலனித்துவ காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். .
அம்பேபுஸ்ஸ புகையிரத நிலைய கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், அருகில் உள்ள புகையிரத திணைக்களத்தின் கல் பணிமனையையும் அவதானித்தார்.
புகையிரத திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் மக்கள் நீண்டகாலமாக அனுமதியின்றி வசித்து வரும் வீடுகளையும் இதன்போது பார்வையிட்டார்.
மிகவும் ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வசிக்கும் மக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறும், அருகிலுள்ள காணிகளை தற்காலிகமாக குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.