இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் நடைபெற்றுவரும் 03 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி,
1 – 1 என்ற அடிப்படையில் வெற்றி தோல்வியின்றி நேற்று (30) முடிவடைந்தது.
மூன்றாவதும் இறுதியுமான போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகளுடன் வெற்றியை ஈட்டிய நிலையிலேயே இந்தப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போதான நாணய சுழற்சியில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி, ஆப்கானிஸ்தானுக்குரிய 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 313 ஓட்டங்களைக் குவித்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரான் அதிரடியாக விளையாடி 162 ஓட்டங்களை விளாசினார். இதுவே, ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் ஒரு நாள் போட்டியில் குவித்த அதிகப்படியான ஓட்டங்களாகும்.
314 ஓட்டங்களை இலக்கு வைத்து களத்தில் இறங்கிய இலங்கை அணி, 48 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்த நிலையில் 314 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
வெற்றிகரமான துடுப்பாட்டத்தை ஆரம்பித்திருந்த பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர், முதல் விக்கெட் இழப்புக்குள் 101 ஓட்டங்களைக் குவித்திருந்தனர்.
குசல் மெண்டிஸ் 67 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 35 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 33 ஓட்டங்களையும் குவித்தனர்.
போட்டி நடைபெற்ற பல்லேகல சர்வதேச மைதானத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகப்படியான ஓட்டங்கள் இதுவேயாகும். இவ்வாண்டு ஜனவரி மாதத்தில், இலங்கை அணியினர் 296 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.