“நாமே இலங்கையின் உண்மையான நண்பன். தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க,
இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நிதி அமைப்புகளை நாம் ஊக்குவித்து வருகின்றோம்” என்று சீனா பதிலளித்துள்ளது.
“சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரர் என்ற வகையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை உடனடியாக இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு சீனா ஊக்குவித்து வருகின்றது” என்று, இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
நாட்டின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் இலங்கையின் அனைத்துக் கடன் வழங்குநர்களின் கூட்டங்களிலும் சீனா தீவிரமாகப் பங்கேற்றது என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.
சீனாவின் நிதி நிறுவனங்கள், கடந்த ஏப்ரல் மாதம் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியைத் தாமதமின்றி தொடர்பு கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ள தூதரகம், பல்வேறு வங்கிகளின் பணிக் குழுக்கள் நாட்டுக்குப் பயணம் செய்து, வருகின்றன என்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்து சீனத் தூதரகம் விடுத்திருந்த அறிக்கையிலேயே மேற்படி கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (30) உரையாற்றிய சாணக்கியன் எம்.பி சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்லவென்று தெரிவித்திருந்தார்.
உண்மையான நண்பராக இருந்தால், சர்வதேச நாணய நிதியக் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு சீனா ஏன் உதவவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையிலேயே, சாணக்கியன் எம்.பிக்கு பதிலளிக்கும் வகையில் சீனத் தூதரகத்தினால் இந்த அறிக்கை இன்று (01) வெளியிட்டிருக்கிறது.