இவ்வருடத்தின் முதல் 8 மாதக் காலப்பகுதிக்குள், இந்நாட்டை விட்டு 477 மருத்துவர்கள் வெளியேறி
வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த லொகுகே, தொழில் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றார்.
'இந்த வரி விதிப்புகளால் இந்நாடு பின்னோக்கி நகரும். நாட்டை விட்டுச் செல்லும் தொழில் நிபுணர்களை நிறுத்துவதை விடுத்து, அவர்கள் இவ்வாறு நாட்டை விட்டுப் புறப்பட என்ன காரணமென்பதைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகாண வேண்டும்.
கடந்த 29ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 'மருத்துவ மற்றும் பொறியியல் துறை மாணவர்கள் இலங்கைப் பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்பில், நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்பட வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.
'ஒரு மருத்துவபீட மாணவரொருவருக்காக இலங்கை அரசாங்கம் 60 இலட்சம் ரூபாயைச் செலவிடுகின்றது. அவர்களை இலங்கையிலேயே இருக்கச் சொல்லியே அரசாங்கம் அவ்வளவு தொகையைச் செலவிடுகின்றது. இவ்வாறு எமது நாட்டில் பயிற்சியளித்து வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றுவதால், அந்நாடுகள் எமக்களிக்கும் நிதியுதவிகளுக்கு மேலதிகமாக நாம் அந்நாடுகளுக்கு உதவிகளைச் செய்திருக்கிறோம். எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இந்தப் பிரச்சினை பாரதூரமானதாகவே இருக்கும். அதனால் இதற்கு விரைந்து தீர்வு காணவேண்டும்' என்று, ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.