பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இன்னும் இரு மாதக்
காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டு மக்களின் அபிலாஷைக்கு முரணாக அரசாங்கம் செயற்படுவதை ஏற்க முடியாதென்றும் குறிப்பிட்ட அமைச்சர் போராட்டங்களின் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், அரசமைப்பின் பிரகாரம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
“அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்காக நாடாளுமன்ற மட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் தேசிய சபை, துறைசார் மேற்பார்வைக் குழு ஆகியன நியமிக்கப்பட்டுள்ளன. புதிதாக மூன்று விசேட தெரிவுக் குழுக்களை அமைக்கவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
“பொருளாதார மறுசீரமைப்புக்காக, நடைமுறையில் இருந்த சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. சமூகக் கட்டமைப்புக்கு வலுச் சேர்க்கும் வகையில் விசேட தேவையுடையவர்களுக்கான சட்டம், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் சட்டங்கள் காலத்தின் தேவைக்கமைய திருத்தம் செய்யப்படவுள்ளன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.