யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும்
மொனராகலை மாவட்டங்களில் உள்ள 193,000 று நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக 9,300 மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை அமெரிக்கா இன்று (05) உத்தியோகபூர்வமாக விவசாய அமைச்சிடம் கையளித்தது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) நிதி உதவியுடன் FAOஇனால் கொள்வனவு செய்யப்பட்ட இந்த உரமானது USAIDஇனால் ஆதரவளிக்கப்படும் உர உதவியின் முதலாவது தொகுதியாகும். நாடு முழுவதுமுள்ள ஒரு மில்லியன் விவசாயிகளைச் சென்றடையக்கூடிய மேலதிக உரத் தொகுதிகள் எதிர்வரும் மாதங்களில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இலங்கை விவசாயிகளுக்கு அமெரிக்க மக்களால் வழங்கப்படும் இந்த உரமானது எதிர்வரும் மாதங்களில் எண்ணற்ற இலங்கைக் குடும்பங்களுக்கு உணவளிப்பதற்கு உதவி செய்யும்” என்று, கொழும்புத் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த உரத்தினைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
“இலங்கையின் அனைத்துத் தேவைகளையும் உரம் வழங்குவது மாத்திரம் பூர்த்தி செய்யாது என்பதை நான் அறிவேன். எனினும் இவ்வுதவியானது இச்சவாலான நேரத்தில் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் அமெரிக்கா வழங்கும் மிகப் பெரிய முதலீடு மற்றும் ஆதரவின் ஓர் அம்சமாகும். ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டில் சிறு வணிகங்களுக்கான புதிய உதவி மற்றும் மேலதிகக் கடன்கள் வடிவில் 240 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை நாங்கள் அறிவித்துள்ளோம். தொடர்ந்தும் அதை மேற்கொள்வோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.