பொரளை – கொட்டா வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்று வருவதாகக்
கூறப்படும் சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்குளி – கஜீமா தோட்டத்தைச் சேர்ந்த பாய் என்றழைக்கப்படும் மொஹமட் பஸீர் மொஹமட் ரஜாப்தீன் (41 வயது) என்ற துணி வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அவர் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.
ஒரு சிறுநீரகத்துக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 80 இலட்சம் ரூபாய் வரையில் வழங்குவதாகக் கூறி, கொழும்பு 14 மற்றும் 15 பிரதேசங்களில் வறுமை நிலையில் வாழும் நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணிடமிருந்து சிறுநீரகங்களை இவர் பெற்றுக்கொண்டுள்ளார் என்றும், ஆனால் அதற்கு ஒருவருக்கு தலா இரண்டரை இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மாத்திரமே பெற்றுக்கொடுத்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.