சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தாய்மார்களுடன் கைக்குழந்தைகள் 27பேர் காணப்படுவதாக
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்தக் கைக்குழந்தைகளில் 13 ஆண் குழந்தைகளும் 14 பெண் குழந்தைகளும் காணப்படுவதாத் தெரிவித்த டலஸ் எம்.பி, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 90 ஆயிரத்து 360 கைதிகளில் 189 பட்டதாரிகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
ஏனையோரில் இரண்டாயிரத்து 294 பேர் பாடசாலைக் கல்வியைப் பெறாதவர்கள் என்றும் 12 ஆயிரத்து 817 பேர் தரம் ஐந்து வரை பாடசாலைக் கல்வியை மேற்கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், 17 ஆயிரத்து 62 பேர் தரம் ஐந்து பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் என்றும், 30 ஆயிரத்து 258 பேர் தரம் எட்டு பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் என்றும் தெரிவித்தார்.
தான் இந்தத் தகவல்களை முன்வைக்கக் காரணம் நமது நாட்டுக் கல்வி நிலையில் காணப்படும் பின்னடைவு மற்றும் கல்விக்கும் மக்களுக்கும் இடையில் காணப்படும் இடைவெளியைச் சுட்டிக்காட்டுவதற்காகும் என்றும் குறிப்பிட்ட அவர், இவ்விடயம் தொடர்பில் விஞ்ஞான ரீதியில் அவதானம் செலுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.