உலகில் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எனது
நோக்கம். நாடு நிச்சியமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகரும். தாய் நாட்டை விட்டு யாரும் வெளியேறத் தேவையில்லை' என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமது நாட்டில் தமக்கான உலகத்தை உருவாக்குவது இளைஞர்களின் பொறுப்பாகும் என்றும் அதுவே உண்மையான திறமை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் இளைஞர்களுடன் இடம்பெற்ற இணையத்தள உரையாடலின் போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 2025ஆம் ஆண்டளவில் வளமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு இளைஞர்கள் பங்களிக்க வாய்ப்பு இருக்கின்றது என்றார்.
அன்று ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது. ஆனால், இன்று நாட்டின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று எடுத்துரைத்த ஜனாதிபதி, இன்றைய இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்துள்ளது என்றும் தற்போதுள்ள அரசமைப்பில் அவர்கள் மகிழ்ச்சியடையாததே அதற்குக் காரணமென்றும் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார அமைப்பை விரைவாக அமைக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.