நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 31 அரசியல் கைதிகள் மாத்திரமே உள்ளனர் என்று, நீதி, சிறைச்சாலை
அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 2015ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் சுமார் 400 அரசியல் கைதிகள் இருந்தனர் என்றும் பின்னர் அந்த எண்ணிக்கை 110ஆகக் குறைக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
'அவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் நிறைவு செய்வதற்காக கொழும்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட மேல் நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.
'இதையடுத்து, குறித்த எண்ணிக்கை 60ஆகக் குறைந்தது. இந்நிலையில், தற்போது 16 குற்றவாளிகளும் 15 சந்தேகநபர்களும் உள்ளனர். குறித்த வழக்குகளை விரைவில் நிறைவு செய்யுமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.