வடக்கு மாகாணத்தில் உள்ள 32 அரச காணிகள், மக்களுக்கோ அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கோ
தெரியாமல், சத்தம் சந்தடியின்றி தற்போதைய ஆளுநராலும் அதற்கு முன்னாள் பதவிலியிருந்த ஆளுநராலும் படையினரின் பயன்பாட்டக்குக் கையளிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் படையினர் நிலைகொண்டுள்ள நிலங்கள், தனியார் காணிகளாகவும் அரச காணி மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமானதாகவும் காணப்படுகின்றன.
இவ்வாறு படைமுகாம் காணப்படும் நிலங்களைத் தமக்கே வழங்குமாறு படையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இவற்றில் தனியார் நிலங்களின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் அதேநேரம், தமது நிலம் தமக்கு வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அரச காணிகள் அந்தந்தப் பிரதேசப் பொதுப் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் நீண்ட காலமாகக் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன.
இருப்பினும், அரச காணிகள் இரகசியமான முறையில், வெளியில் ஆரவாரமில்லாமல், அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டு, பிரதேச செயலாளர்களிடம் இருந்த உரிமை பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அவ்வாறு உரிமை மாற்றம் செய்யப்பட்ட விவரங்களுக்கமைய 2020, 2021, 2022 ஆகிய மூன்று ஆண்டுக் காணப்பகுதியில் மாத்திரம் 32 அரச காணிகள் பாதுகாப்பு அமைச்சிடம் ஆளுநர்களால் கையளிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இராணுவம், கடற்படை, விமானப்படையினர் நிலைகொண்டுள்ள இடங்கள் பலவே அவர்களுக்கென நிரந்ரமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, வடக்கில் 32 படைமுகாம்களுக்குமாக 22 ஹெக்டெயார் அல்லது 54 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. படையினர் பயன்பாட்டுக்காக பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட இந்த 32 இடங்களில் ஒரேயோர் இடம் விமானப் படையினரின் பயன்பாட்டுக்காக கேப்பாபுலவில் வழங்கப்பட்டுள்ளது.