சிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க
வேண்டியுள்ளதாக, தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
இன்றைய தினம் (07) நாவற்குழியில் 7 அடி சிவலிங்க பிரதிஷ்டையின் பின் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கடந்த மாத இறுதிப் பகுதியில் நாவற்குழி பகுதியில் சிவலிங்கத்தை வைக்க நிரந்தரமான கட்டடம் ஒன்று அமைக்க வேண்டும் என சிவ பூமி அறக்கட்டளையினர் தீர்மானித்திருந்தோம்.
“அதன் அடிப்படையில் அதற்குரிய பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினர் வந்து பலதடவை விசாரணை மேற்கொண்டார்கள்.
“நாங்கள் கூறினோம் இது ஒரு கோவில். சைவ கோவில். இந்துகளின் தெய்வமாகிய சிவபெருமானின் அடையாளமாக சிவலிங்கத்தைத் தான் இங்கே வைக்கப் போகின்றோம் எனக் கூறினோம். அப்போது அவர்கள், ள் சிவபெருமான் என்றால் அவர் யாருடைய ஆள்? எனக் கேள்வி எழுப்பினர்.
“அவர்தான் எங்களுடைய பரம்பொருள் என்று கூறினோம். அதையும் இரண்டு பக்கங்களில் எழுதிச் சென்றார்கள். இவ்வாறு பல விசாரணைகளுக்கு நாங்கள் முகம் கொடுத்தோம். சிவபெருமானின் அடையாளமான சிவலிங்கத்தினை யாழ்ப்பாணத்தில் வைப்பதற்கே இங்கு பல இடர்பாடுகளை எதிர் நோக்க வேண்டி இருக்கின்றது.
“குறிப்பாக, விழ விழ எழும்புவோம். யாழ்ப்பாணத்தவர்கள் அப்படித்தான். அவ்வாறுதான் யுத்த காலத்தில் கூட எமது இந்து மதத்தை கட்டிக் காத்து வந்த நாம், தற்போது சிவன் சிலைகளை பல இடங்களில் வைப்பதன் மூலமே இந்து மதத்தின் அடையாளங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
“குறிப்பாக இந்த பகுதியில் மூன்று ஏக்கர் காணியினை கொள்வனவு செய்துள்ளோம். அதற்கு உதவிய அரச திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
“அத்தோடு இந்த வீதியினால் பயணிக்கும் அடியவர்கள் சிவலிங்கத்தை வழங்கி யாழ்ப்பாண நகருக்குள் பிரவேசிப்பதற்கு ஏற்றவாறாக ஒரு புனிதத் தன்மையோடு இந்த இடத்தினை பேணுவதற்காகவும் இந்த இடத்தில் ஒரு நிரந்தர கட்டடத்தை அமைத்து 7 அடி சிலையினை அதாவது கருங்கல்லிளான 7 அடி சிவலிங்கத்தினை அமைத்து, நித்தம் ஒரு பூஜை வழிபாடுகளும் இடம் பெறக்கூடியவாறு ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்” என்றார்.