ஹோட்டல் மற்றும் தொடர்மாடிக் குடியிருப்பின் உரிமையாளரான பொதுப் பயன்பாட்டுகள்
ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, தொடர்மாடிகள் மற்றும் ஹோட்டல் கட்டமைப்புகளுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதோடு, ஏனைய இடங்களுக்கு அதிக விலையில் மின்சாரத்தை விநியோகித்து வரும் முறைமை தொடர்பில் இன்னும் சில தினங்களில் தான் வெளிப்படுத்துவதாக, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
'பொதுமக்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமென்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும். அவ்வாறு மின்சாரத்தை வழங்க வேண்டுமென்றால், கட்டண மீள்திருத்தமொன்று அவசியம்.
'பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவானது சில இடங்களில் நடந்துகொண்ட விதம் தொடர்பில், எதிர்காலத்தில் வெளிப்படுத்துவேன். எவ்வாறெனினும், மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின், அடுத்தாண்டு முதல் நாளொன்றுக்கு 6 முதல் 8 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும்.
'ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 57.90 ரூபாய் செலவாகுமாயின், அந்த ஒரு அலகுக்கு 57.90 ரூபாயையே அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் அறவிட வேண்டும். எந்தவொரு பாகுபாடுமின்றி இந்தக் கட்டணம் அறவிடப்படல் வேண்டும்' என்று, அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.