நல்ல சூரிய ஒளி மற்றும் சூரிய வெளிச்சத்தைப் பெறும் நாடாக விளங்கிய இலங்கை தற்போது சூரியனை
பார்க்க முடியாத நாடாக மாறியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (08) மதியம் 12 மணியளவில்கூட இருண்ட சூழல் நிலவியது. இதுவரை கண்டிராத பனிமூட்டம் வளிமண்டலத்தில் படர்ந்திருந்தது.
காற்றின் தரச் சுட்டெண்படி, கொழும்பு காற்றின் தரச் சுட்டெண் 187 அலகுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஓர் ஆரோக்கியமற்ற நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
காற்றின் தரக் குறியீடு பொதுவாக 150 முதல் 200 அலகுகள் வரை இருந்தால், அது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
இந்த திடீர் நிலைமையை எந்த காரணிகள் பாதித்துள்ளன என தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் காற்று மாசு முகாமைத்துவ பிரிவின் பிரதான விஞ்ஞானி சரத் பிரேமசிறியிடம் வினவிய போது, "இது இந்தியாவில் காற்று மாசுபாட்டைப் போன்று இலங்கையையும் பாதிப்படையச் செய்துள்ளது. இது இந்தியா வழியாக வீசும் மண்டவுஸ் சூறாவளியின் தாக்கம் மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயு இலங்கையை நோக்கி இழுக்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.
இலங்கையின் பல பகுதிகளில் இந்த நிலை காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் வளி மாசு முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, கண்டி, குருநாகல், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்த நிலைமை அதிகமாக காணப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை பல்வேறு பகுதிகளில் அவதானித்த மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.
சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அதிக அளவு காற்று மாசுபாடு ஆபத்தானது என சரத் பிரேமசிறி எச்சரிக்கிறார்.
"இந்த நிலை அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக சுவாசக் கோளாறு உள்ளவர்கள் ஆபத்தில் உள்ளனர். எனவே, அத்தகையவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். KN 95 போன்ற முகக்கவசமாயின் சிறந்தது" என்று பிரேமசிறி கூறினார். அத்துடன், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்” என்று அவர் வலியுறுத்தினார்.
பெருமளவில், நாளை வெள்ளிக்கிழமைக்குள் (09) வளிமண்டலம் சரியாகிவிடும் என்று தெரிவித்த அவர், "இந்தியாவை நோக்கி செல்லும் சூறாவளியால் இலங்கை பாதிக்கப்படாது. காற்று குறைந்த பிறகு, இலங்கையில் மாசுபட்ட காற்று குறையும்" என்றார்.
தற்போது, இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான காற்று மாசு உள்ளது.
புதுடெல்லியில் காற்றின் தரக் குறியீடு 387 அலகுகளாக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் அறுவடைக்குப் பின் அப்புறப்படுத்தப்படும் தாவர பாகங்களை எரிப்பதாலும், வாகனங்கள் வெளியிடும் புகைகளாலும் ஒவ்வொரு ஆண்டும் இந்நிலைமை மோசமாகிறது.