மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் திகதி, இம்மாதம் கடைசி வாரத்தில்
அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தின் 26ஆவது பிரிவின் பிரகாரம் இந்தத் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் வாக்கெடுப்புச் சட்டத்தின் பிரகாரம் மார்ச் 20ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட வேண்டும்.
அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (08) அறிவித்ததுடன், மாகாணசபை மட்டத்தில் 2022 வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி 341 மாகாணசபைகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே, இந்தத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், எதிர்வரும் நாட்களிலும் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.