இந்தியாவில் காற்று மாசுபாடு, இன்று இந்நாட்டுக் காற்றின் தரத்தை பாதித்துள்ளது. ஆனால்,
நேற்றுடன் ஒப்பிடும் போது காற்று மாசு அளவு குறைவாக உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்று மாசுபாட்டின் அளவு படிப்படியாக குறைவடைந்தாலும், இன்னும் சில நாட்களுக்கு இது தொடரலாம் என, சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
சர்வதேச காற்று மாசுபாட்டின் படி, இலங்கையில் காற்று மாசுபாட்டின் அளவு இன்னும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அவற்றில், கம்பஹாவின் காற்று மாசு அளவு 153 என்ற எல்லையை தாண்டியுள்ளது. சர்வதேச தரவுகளின்படி, 101 மற்றும் 200 க்கு இடையிலான அளவு வளிமண்டலத்தில் மோசமான நிலையை உருவாக்கும்.
கொழும்பு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி மற்றும் அம்பலாந்தோட்டை ஆகிய நகரங்களில் இதன் அளவு 110 முதல் 131 வரை காணப்பட்டது.
தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் தரவுகளின்படி, ஹம்பாந்தோட்டை, பதுளை, கேகாலை, பத்தரமுல்ல, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் அளவு உணர்திறன் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவில் இருந்தது.
நேற்றைய தினத்தைப் போன்று இன்றும் நாட்டின் பல பகுதிகளில் கடும் குளிரான காலநிலை காணப்பட்டது. இந்த காற்று மாசுபாடும் அதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடும் குளிரான காலநிலையை தாங்க முடியாமல் வட மாகாணத்தில் அதிகளவான மாடுகள் மற்றும் ஆடுகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் இவ்வாறு இறந்த மாடுகளின் எண்ணிக்கை 250ஐ நெருங்கியுள்ளது.
இந்த மாவட்டங்களில் பல திறந்த வெளி மாட்டுக் கொட்டகைகள் காணப்படுவதாகவும் அவ்வாறான மாட்டுக் கொட்டகைகளில் இருந்த மாடுகளே இவ்வாறு இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா மற்றும் கிளிநொச்சியில் வெப்பநிலை 19 பாகை செல்சியஸ் அளவில் காணப்பட்டது.