புதிய அமைச்சர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 290 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான பணிப்பாளர் சபையின் அனுமதி எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதால் அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என அந்த வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக்கு புதிதாக 12 அமைச்சர்களை நியமிப்பது தொடர்பான பட்டியல் சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அனுப்பப்பட்ட போதிலும், அமைச்சர்கள் நியமனம் தொடர்ந்தும் தாமதமாகி வந்தது.
பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட பிறகு புதிய அமைச்சர்கள் நியமனம் நடைபெறும் என்றும் வதந்திகள் பரவினாலும் அதுவும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
அமைச்சரவை தற்போது பதினெட்டு உறுப்பினர்களைக் கொண்டதுடன், அரசியலமைப்பின் படி மேலும் பன்னிரண்டு அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி, பன்னிரெண்டு அமைச்சர்களின் புதிய நியமனம் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குப் பின்னர் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அறியமுடிகிறது.
அமைச்சரவைக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் வஜிர அபேவர்தன, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோரும் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், எஞ்சியவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.