ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள தீர்வாக அமையாது என்றும் அதுவே
தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக நாளை 13ஆம் திகதி சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இருக்கின்ற அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாத ஜனாதிபதி, துணிச்சலானதும் சரியானதுமான ஒரு அணுகுமுறையை கையாள்வாரா என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, பேச்சின்போது 3ஆம் தரப்பு குறிப்பாக இந்தியாவின் மத்தியஸ்தம், கால வரையறைக்குள் பேச்சுவார்த்தையை முடிக்க எதிர்வரும் கலந்துரையாடலில் வலியுறுத்துவோம் என கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கடினமான நிபந்தனைகளை முன்வைத்து ஜனாதிபதியின் அழைப்பை கண்மூடித்தனமாக புறக்கணிப்பது பொறுப்புள்ள ஒரு செயலாக அமையாது என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் மத்தியஸ்தம் என்ற கருத்தை அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும் என்றும் இதுவே தனது எதிர்பார்ப்பு என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவல் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையில் அதி உச்ச அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சனை தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ கலத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது என்றும் நல்லாட்சி காலத்திலும் பேச்சு தொடரந்தாலும் அப்போது அரசாங்கத்திற்கும் ஏற்பட்ட பிரச்சினையால் தட்டிக்கழிக்கபட்டது எனகிறார்.
தற்போதும் இந்த பேச்சுவார்த்தை ஐ நா தீர்மானம்இ உலக நாடுகளின் அழுத்தம் அல்லது பொருளாதார பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான செயற்பாடாக இடம்பெறுகின்றதா என செல்வம் அடைக்கலநாதன் சந்தேகம் வெளியிட்டார்.