கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் தமிழர்களுக்கு சொந்தமான பாரம்பரிய காணிகளை
தொல்பொருள் திணைக்களத்திற்கு சுவீகரிக்கும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட படுவாகங்கரையில் தொல்பொருள் திணைக்களத்தினால் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் எல்லைக் கற்களை நிறுவுவதற்கு நேற்று 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் பிரதிநிதிகளுடன் வந்த காணி உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வெடுச்சேனை மற்றும் வெல்லாவெளி கல்லடி பிள்ளையார் கோயிலை அண்மித்த பகுதிகளிலும் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் காணப்படுவதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடங்களில் எல்லைக் கற்கள் அமைக்கப்படுவதற்கு மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குச் சென்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி கலந்துரையாடியுள்ளார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்யம் சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.நடராசா, போரதீவுப்பற்று மாவட்ட அவைத் தலைவர் வை. ரஜனி மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குழுவும் இணைந்து கொண்டதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காணிப்பிரச்சினை தொடர்பில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் கலந்துரையாடல் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி கல்லடி பிள்ளையார் கோயிலை சூழவுள்ள பகுதிக்கு மேலதிகமாக வெடுச்சேனை பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 40 இடங்களில் தொல்பொருள் திணைக்களம் எல்லைக்கற்கள் அமைப்பதற்கான இடங்களை அடையாளப்படுத்தி உள்ளதாக மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.