வடக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய
மீனவர்களின் படகுகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு கடற்றொழிலாளர் சங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அதன்படி தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட இந்திய படகுகள் வடக்கிலுள்ள மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட உள்ளன.
ராமேஸ்வரத்தில் இருந்து வடக்கு கடல் எல்லையை நோக்கி வரும் இந்திய மீனவர்களின் படகுகள் பழுதடைந்து நடுக்கடலில் தத்தளிக்கும் சந்தர்ப்பங்களில் இந்த மீன்பிடி படகுகளை அவர்களின் ஆதரவிற்கும் பிழைப்புக்கும் பயன்படுத்துமாறு தமிழ்நாடு மீனவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு வழங்கப்படவுள்ள படகுகளை கண்காணிப்பதற்காக யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய படகுகளை மீனவ சங்க பிரதிநிதிகள் பார்வையிட்டுள்ளனர்.
புதிய கடற்றொழில் சட்டத்தின் பிரகாரம், நாட்டின் கடற்பரப்பை மீறி நாட்டிற்குள் பிரவேசிக்கும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவ்வாறான கப்பல்களில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் மீது தற்போதுள்ள விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.