கோட்டாபய ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு அவரது சகோதரரான பஸில் ராஜபக்ஷவே பிரதான காரணமெனம்
தெரிவித்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு அவரது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவே காரணமென்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்துள்ள அவர், நாமல் ராஜபக்ஷ என்பவர் ஒரு புரைலர் கோழி என்றும் பிறந்த உடனே நாடாளுமன்றத்துக்கு வந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“மஹிந்த ராஜபக்ஷ உண்மையான தந்தை என்றால், அவர் நாமல் ராஜபக்ஸவை நல்ல பக்குவமடைந்த பின்னர் அரசியலுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். எத்தனையோ பணக்காரர்கள் தங்களது பிள்ளைகளை பஸ்களில் அனுப்பி, அடிமட்டத்தில் இருந்து பழக்குகின்றனர்.
“அப்போதுதான் தந்தையின் மறைவுக்குப் பின் அவரது நிறவனத்தை அவரது பிள்ளைகள் வெற்றிகரமாகக் கொண்டுசெல்வர். அவர்தான் சரியான தந்தை. அப்படித்தான் அரசியலிலும். தந்தை ஜனாதிபதி என்ற கெத்தில் நாமல் நாடாளுமன்றத்துக்கு வந்தார். மாமா என்று அழைத்தவர்களையெல்லாம் மச்சான் என்று அழைக்கத் தொடங்கினார். இறுதியில் மஹிந்த மண் கவ்வினார்” என்று, விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளார்.