வைத்தியர்களுக்கான ஓய்வு வயது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி, அரச நிர்வாக
உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, விசேட வைத்திய அதிகாரி, அரச வைத்திய அதிகாரி, பல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் அரசுப் பதிவு வைத்திய அதிகாரி ஆகிய பதவிகளின் கட்டாய ஓய்வு வயது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்திருத்தத்தின்படி ஏற்கனவே 63 வயதை பூர்த்தி செய்த மருத்துவர்கள் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் ஓய்வுபெற வேண்டும்.
62 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 63 வயது நிறைவடைந்ததும் 61 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 62 வயது பூர்த்தியடைந்ததும் ஓய்வுபெற வேண்டும்.
60 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 61 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வுபெற வேண்டும் என்றும் 59 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 60 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வுபெற வேண்டும் என்றும் புதிய திருத்தத்தில் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், ஜனவரி முதல் திகதிக்கும் ஜூன் 30ஆம் திகதிக்கும் இடையில் பிறந்த நாள் கொண்ட மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட ஆண்டின் ஜூன் 30ஆம் திகதி வரை பணியாற்ற வாய்ப்பு உள்ளது.
ஜூலை மாதம் முதலாம் திகதிக்கும் டிசம்பர் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த வைத்தியர்களுக்கு குறித்த வருடத்தின் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை சேவையாற்றுவதற்கு அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆ
இந்த திருத்தங்கள் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை அமுலுக்கு வரும்.
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை உள்ளடக்கியதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (14) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி 2023 ஜனவரி 25, வரை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு 60 வயது கட்டாய ஓய்வு வயது விதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
176 விசேட மருத்துவ நிபுணர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையின் பின்னர் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அரச ஊழியர்கள் 60 வயதுக்குள் ஓய்வுபெற வேண்டும் என்ற பழைய வர்த்தமானி அறிவித்தலை, டிசம்பர் 5 அன்று, பிரதமர் தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சர் என்ற வகையில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.