ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள்
விடயத்தில், மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸ் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவு பிறப்பித்தார்.
பொரளை மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.பி.கே.வை 8732 என்ற காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தினேஷ் ஷாப்டர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இதுவொரு படுகொலை என்று உறுதிப்படுத்தப்பட் நிலையில், பொரளை பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கிணங்களே, கிரிக்கெட் வர்ணனையாளரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி மாலை கொழும்பு 07, மலர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து வெளியேறிய தினேஷ் ஷாப்டர், தனது கையடக்கத் தொலைபேசிக்கு பதிலளிக்கவில்லை என்ற காரணத்தால், தனது அலைபேசிக்குக் கிடைத்த சமிக்ஞையின் அடிப்படையில் தனது உதவியாளர் ஒருவரை பொரளை மயானத்துக்கு மனைவி அனுப்பி வைத்துள்ளார். அங்கு, காருக்குள் வயரால் கழுத்தை நெரித்து கைகள் கட்டப்பட்ட நிலையில் தினேஷ் காணப்பட்டுள்ளார் என்று, பொரளை பொலிஸார் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்துள்ளனர்.
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தவிர புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுவரை, பொரளை பொலிஸார் அவரது மனைவி டானி ஷாப்டர், நிர்வாக அதிகாரி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மயானத்தின் பணியாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, தினேஷ் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் காரின் மின்னணு தரவுகளையும் அவர் பயன்படுத்திய அலைபேசி, குறிப்பாக சிசிடிவி கெமரா காட்சிகளைள் குறித்தும் விசாரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரதான வாயிலின் ஊடாக அவர் தனியாக மயானத்துக்குள் பிரவேசித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 3 வருடங்களுக்கு முன்னர், கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸுக்கு வியாபார நோக்கத்துக்காக தினேஷ் ஷாப்டரால் 400 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்தக் கொடுக்கல் வாங்கல் விவகாரம் சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்குச் சென்ற நிலையில், கிரிக்கெட் வர்ணனையாளருக்கு எதிராக மூன்று முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தினேஷ் பதிவு செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.