தேசிய இனப் பிரச்சிரைனக்குத் தீர்வு காணும் விடயங்கள் குறித்து தொடர்ந்து பேசுவதற்காக, தமிழர் தரப்பை இன்று (21) மாலை
மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 6 மணி முதல் இந்தப் பேச்சுவாரத்தை நடக்கவுள்ளதென்றும் குறிப்பிடப்படுகிறது.
அரசாங்கத் தரப்பிலிருந்து, ஜனாதிபதியுடன் பிரதமர் தினேஸ் குணவர்தன, அமைச்சர்களான விஜேதாஸ ராஜபக்ஷ, அலி சப்ரி, பிரசன்ன ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் பங்குபற்றுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய இந்தப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுமாறு, சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோருக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் சார்பில் சுமந்திரன் எம்.பி தகவல் தெரிவித்திருக்கிறார் என்றும் தெரியவருகிறது.
இருப்பினும், விக்னேஸ்வரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கொழும்பில் இல்லாத காரணத்தால், இன்றைய கூட்டத்தில் அவர்கள் இருவரும் பங்குபற்ற மாட்டார்கள் என்றே தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இரா.சம்பந்தன், சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர், தமிழர் தரப்பிலிருந்து இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை முன் கொண்டு செல்வதற்கான வழிவகைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டு முடிவுகளும் நடவடிக்கைத் திட்டங்களும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.