தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்த சொத்துகளும் தம்மிடம் இல்லை என தெரிவித்துள்ள உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன், தமிழீழக் கோரிக்கையை கைவிடவில்லை
ஆனால், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளே எப்படியான தீர்வு தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கக்கூடிய எந்தவொரு முயற்சிகளையும் நாம் வரவேற்கிறோம். தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான முக்கிய நடைமுறையாக சர்வகட்சி தலைவர் கூட்டத்தைப் பார்க்கலாம்.ஆனால், அதிபர் ரணில் விக்ரமசிங்க இதில் ஒரு சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கிறாரா என்கிற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“புதிய அரசியலமைப்பு யோசனைக்கு கடந்த காலத்தில் உலகத் தமிழர் பேரவையும் யோசனைகளை வழங்கியிருந்தது. இவ்வாறான நிலையில் நாம் கூறும் தீர்வுதான் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென நாம் கூறவில்லை. இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் பேசி கொண்டுவரும் தீர்வை நாம் ஆதரிப்போம்.
“இந்தியாவின் பங்களிப்பு இல்லாது கொண்டுவரப்படும் எந்தவொரு தீர்வும் நிலைகொள்ளாது. 70 மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் வாழும் நாடு இந்தியா. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வரலாற்று தொடர்புகள் உள்ளன.
“அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி வழங்கப்படும் தீர்வே நிலையானதாக இருக்கும். இவ்வாறான நிலையில், சுதந்திர தினத்துக்கு முன்னர் இதனை செய்வது சாத்தியமில்லை. ஆனால், இதுவொரு முக்கியமான முயற்சி.
“தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்தவிதமான சொத்துகளோ அல்லது கப்பல்களோ உலகத் தமிழ் பேரவையிடம் இல்லை. யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்து 2010ஆம் ஆண்டே உலகத் தமிழர் பேரவை ஸ்தாபிக்கப்பட்டது.
“எனவே இது தொடர்பில் எங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் போலியானவை. தமிழீழக் கோரிக்கையைக் கைவிடவில்லை. ஆனால், சர்வதேசத்தின் முன்னிலையில் இலங்கை தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். அந்தத் தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளே தீர்மானிக்க வேண்டும். இதற்கு நாம் ஆதரவளிப்போம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.