ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அதிகாரத்தினால் தூக்கு மேடையில் இருந்து உயிர்த் தப்பிய இராணுவ
அதிகாரியினால் இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 8 தமிழர்களின் நினைவேந்தல் வடக்கில் இடம்பெற்றது.
மிருசுவில் படுகொலைகளின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை மனதில் நிறுத்தி இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
நினைவேந்தலில் முதலில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அதன்பின்னர் சுடர் ஏற்றி, பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட கொல்லப்பட்டவர்களின் உறவுககள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
ஞாபாலன் ரவிவீரன், செல்லமுத்து தேவகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயசந்திரன், கதிரவன் ஞானசந்திரன், ஞானசந்திரன் ஷாந்தன் மற்றும் ஐந்து வயதான வில்வராஜா ஆகியோரை, 2000 ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதியன்று கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற முதல் இராணுவ அதிகாரியாக ரத்நாயக்க முதியன்சேலாகே சுனில் ரத்நாயக்க என்பவர் இடம்பெற்றிருந்தார்.
இவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகிய இருவரும் கட்டளையிடும் அதிகாரிகளாகப் பணிபுரிந்த கஜபா படைப்பிரிவில் பணிபுரிந்த இராணுவ வீரராவார்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ரத்நாயக்க முத்யன்செலாகே சுனில் ரத்நாயக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 2020 மார்ச்சில் விடுவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
யாழ்ப்பாணம் மிருசுவிலில் 2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி 8 தமிழர்களைக் கொன்ற வழக்கில், 2019 ஏப்ரலில் அவருக்கு உயர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது. புவனேக அலுவிஹார, நளின் பெரேரா, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற பெஞ்சில், இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது.
அவரது விடுதலையை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உள்ளிட்ட சர்வதேச சக்திகள் கடுமையாக கண்டித்தன. அத்துடன், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் இலங்கையின் 22 அமைப்புகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், எந்தவொரு குற்றத்தையும் செய்யும் இராணுவத்தினர் அவற்றில் இருந்து தப்பிக்க முடியும் என்ற ஒரு பயங்கரமான செய்தி, ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டியுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தன.
இதேவேளைய நினைவேந்தலில் பங்குபற்றிய உறவினர்கள், “தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தீர்வுக்காக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமா? சுய ஆட்சியா? என்ற பொதுஜன வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கூறுவோம்” என்ற முக்கிய விடயங்களை வலியுறுத்தினர்.