இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ள 500 ஜீப் வண்டிகளில் முதற்கட்டமாக 125 புதிய
ஜீப் வண்டிகள், நேற்றைய தினம் (22) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் வைத்து பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்களிடம் மேற்படி ஜீப் வண்டிகளைக் கையளித்தார்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர், இலங்கை பொலிஸாருக்கு இன்றைய தினம் விசேட தினம் எனவும் சில பொலிஸ் நிலையங்களில் கடமைக்காக வாகனங்களின்மைக்கு தீர்வாக இந்த 500 புதிய ஜீப் வண்டிகளை பெற்றுக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
“பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க, திருட்டு மற்றும் போதைப்பொருள்களை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த புதிய ஜீப் வண்டிகள் இலங்கை காவல்துறைக்கு மிகவும் அவசியமானவை.
“மேலும் கடந்த 3 ஆண்டுகளாக பொலிஸ் துறையினால் வாகனங்களை வாங்க முடியவில்லை. மேலும் இந்திய உயரதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதால் இத்திட்டம் விரைவாக வெற்றியடைய முடிந்தது. இந்திய உயர்ஸ்தானிகருக்கு எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று, அமைச்சர் தெரிவித்தார்.
இதனையடுத்து உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர், “சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காக இலங்கைப் பொலிஸாருக்கு இந்த புதிய ஜீப் வண்டிகளை வழங்கியுள்ளமை குறித்து இந்திய அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது” என்றார்.