சீனாவில் பரவி வரும் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதனுடன் எதிர்காலத்தில் மீண்டும் முகக் கவசம் பாவனையை கட்டாயமாக்கும் யோசனை ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாட்டுக்கு வரும் வெளிநாட்டினரை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதார தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த கொரோனா காலத்தில் இலங்கையில் பதிவாகிய முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான நபர் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர் எனவும் அந்த அனுபவங்களை இம்முறை நிலைமையை தணிக்க பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். தற்போது வரை சுமார் 1.48 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு ஒமிக்ரோன் மாறுபாடு கொண்ட பிஎப் 7 வகை வைரஸ் தான் தற்போது கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது.
இவ்வாறு சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்த அதேவேளை உயிரிழப்புகளும் பெருகி வருகிறது. இதனால் அங்குள்ள மயானங்களிலும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அனைத்து ஊழியர்களும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.