மத்திய அரசு தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் கடவுள் ராமர் கட்டியதாக நம்பப்படுகிற பாலம்
இருக்கிறது என்பதற்கான துல்லியமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ராஜ்யசபாவில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் மன்னார் இடையே தொடர்ச்சியான சுண்ணாம்பு கற்களால் ஆன மேடுகள் அமைந்துள்ளன. குறைந்த ஆழத்தில் இருக்கும் இந்த சுண்ணாம்பு மேடுகள் ஒரு பாலம் போல தோற்றம் தருகின்றன.
ஆகையால் இதனை புராண இதிகாசமான ராமாயணத்துடன் இணைத்து, கடவுள் ராமரால் சீதையை மீட்க கட்டப்பட்ட ஒரு பாலம் என நம்பப்பட்டது. சீதையை ராவணன் கடத்தியதாகவும் இலங்கையில் ராவணன் பிடியில் இருந்த சீதையை மீட்க அனுமான் உள்ளிட்ட வானரப் படை உதவியுடன் பாலம் கட்டினார் கடவுள் ராமன் என்பதும் இதன் பின்னணியில் உள்ள புராண செய்தி; இந்துமத நம்பிக்கை.
கடவுள் ராமர் கட்டியதுதான் இந்த பாலம் என்பதற்கான எதுவித சான்றுகளும் இல்லை. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் பால விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
அதாவது தமிழகத்தின் மிக நீண்டகால கோரிக்கை சேதுசமுத்திர கால்வாய் அமைக்க வேண்டும் என்பதுதான். வங்க கடலில் பயணிக்கும் கப்பல்கள் இலங்கையை சுற்றித்தான் சென்னை உள்ளிட்ட துறைமுகங்களுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ராமர் பாலம் பகுதியை ஆழப்படுத்தினால் சுமார் 400 கிமீ கடல்வழி, சுமார் 30 மணிநேர பயண செலவு குறையும். இதுதான் சேது கால்வாய் திட்டம் என்பது.
ஆனால் ராமர் பாலத்தின் பெயரால் தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அடிநாதமாக திகழ்ந்திருக்க வேண்டிய சேது கால்வாய் திட்டம் முடக்கப்பட்டது. இந்த சர்ச்சையின் போது ராமர் என்ற ஒரு கடவுள் இருந்தாரா? அவர் பாலம் கட்ட எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார் மறைந்த முதுபெரும் திராவிடர் இயக்க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி.
இதற்காக அவரது தலைக்கு விலை நிர்ணயித்து தலையை வெட்ட சொன்னது இந்துத்துவா கோஷ்டி. பின்னர் நீதிமன்ற தலையீடுகளால் சேது சமுத்திர கால்வாய் திட்டம் முடங்கிவிட்டது.
இந்தப் பின்னணியில், ராஜ்யசபாவில் பாஜக எம்பி கார்த்திகேய சர்மா ஒரு கேள்வியை எழுப்பினார். அதாவது, ராமர் பாலம் தொடர்பாக அறிவியல் ரீதியான ஆய்வு நடத்துவது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர பிரசாத் அளித்த பதில்: ராமர் பாலம் தொடர்பாக விண்வெளி துறையினர் ஆய்வு நடத்தினர். ராமர் பாலம் என்பது சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்கிற நம்பிக்கை உள்ளது. ராமர் பாலம் எனப்படும் பகுதியை செயற்கைக்கோள் படம் பிடித்தது. இந்த செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் ராமர் பாலம்தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றார்.
ஏற்கனவே ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் ராமர் பாலம் இருந்தது என்பதற்கான ஆதாரம் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசே அறிவித்திருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.